ஓ மனமே…!

ஓ மனமே….
நான் சீண்டிப்பார்பதாய் எண்ணி
நீயேன் சினங்கொண்டு அழுகிறாய்…?
சிரிப்பதைவிட நானென் செய்வேன்.

கடந்து வந்த பாதைகளில்
நடந்து பதிந்த சுவடுகளை
பல ஆண்டுகள் கழிந்தாலும்…
மறக்காமல் நீ திரும்பிப்பார்.

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
ஏற்படுத்திய தாக்கங்கள் அங்கு
ஆண்டுகள் பல உருண்டோடியும்
உருக்குலையாமல் உயிரோடுதானிருக்கிறது.

காலச்சக்கரத்துக்குள் நசிந்து…
அவை அழிந்து காணாமல்
காலாவதியாகிவிட்டதாய் எண்ணினால்
மனமே அதுவுன் தவறு.

நீ ஏறிவந்த படிகளிலே
ஏதேனும் உடைந்து விட்டால்
இறங்கிப்போக முடியாது…
அந்தரமாய் தொங்க வேண்டும்.
அதுதான் உண்மை.

அடுக்கி சிலவற்றை
அழகாக சொன்னாலும்
தவறு இருக்கென்று
குறை படுதல் இயல்புதான்.

சகதியாய் கிடக்கிறது.
சமுதாயத்திலே பல சிக்கல்கள்
உடைத்தெறிய நீ வேண்டும்
இல்லையேல் மடைதிறந்து அதுவோடும்.

கிறுக்கிய சில வரிகள்
மனமுன்னை தாக்கியிருந்தால்
மன்னித்துவிடு என்னை
மறுபடியும் ஏனிந்த வம்பு.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

எரிச்சல் தரும் வேதனைகள்.

கவிதையொன்று நானெழுத
கனநாளாய் ஆசைப்பட்டு
காகிதம் நானெடுத்து
சிந்தனையில் வந்தவற்றை
சிதைக்காமல் எழுதிப்பார்த்தேன்.

சினமாக இருந்தது
சில வரிகள்.
சமூகத்தை சித்தரிக்க
அழுக்கான மனங்கள்தான்
அழகாக தெரிந்தது.

சாதியும் மதங்களும்
சங்கடங்கள் செய்வதுவும்
வேடிக்கை பார்க்கின்ற
விந்தை மனிதர்களும்
மதிப்புயர்ந்த மனிதர்களாம்.

மனமோ படம்பிடித்து
நெஞ்சத்தில் திரையிட..
கொஞ்சம் பார்ப்பதற்கே
நெஞ்சம் மறுத்தது.
நினைக்கவும் முடியவில்லை.

புரைக்யோடி கிடக்கின்ற
சகிக்க முடியாத
சமுதாய பிரச்சினைகள்
சகதிகளாய் தினமும்
தெருவெங்கும் கிடக்கிறது.

சீதனத்தை சிலரோ
அருவருப்பதாய் பார்த்தாலும்
அவரும் கேட்கிறார்
சீதனத்தை அதிகம்
இதைவிட விந்தையேது.

அழுவதா சிரிப்பதா
அழுக்கான மனங்களைப்பார்த்து.
சொல்வதொன்று செய்வதொன்று.
தெரியாமல் தானோ
பூமியும் சுழல்கிறது.

காதலைப் பார்த்தால்
பாதிதான் வெற்றி.
சாதியால் பிரிந்தது
சமாதியில் சங்கமம்
மனமோ தவிக்குது.

ஊனப்பட்டது உள்ளம்தான்
உண்மையைச் சொன்னால்
சமுதாயம் சிரிக்கும்
பொய்யை சொன்னால்
பொறுமையாய் இருக்கும்.

உப்பில்லாத உணவும்
உண்மையில்லாத பேச்சும்
உருப்படி என்றால்
உருப்படுமா சமுதாயம்
உணர்வுகள் கேட்கிறது.

எரிச்சல் தருகிறது
இந்த வேதனைகள்
என்ன செய்வது..
எழுதி பார்க்கவே
ஏற்காத மனது.

புரியுதா உனக்கென்று
என்னையே கேட்க
எழுதி பார்த்ததை
கசக்கி எறிந்துவிட்டு
கண்களை கசக்கினேன்.

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8283

உள்ளக்குமுறல்.

வறுமையும் பஞ்சமும்
தலைவிரித்து ஆடுது.
பாலகர் வயிறோ
பாலுக்கு அழுகுது.முன்னைய வாழ்வு
கண்ணுக்குள் தெரியுது.
முடிந்து போனதாவென்று
மனமோ ஏங்குது…!

சாவிலும் வாழ்ந்து
சந்தித்த அனுபவம்.
சங்கடங்கள் வந்தும்
சமாதானம் செய்யுது.

வாழ்ந்தது போதுமென்று.
செத்திட தோன்றினும்- மனம்
பொன்னான உயிரை
மாய்த்திட மறுக்குது.

தென்னோலை தோரணங்கள்
அவ்வப்போ பார்த்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மங்கள வீடுகளில்..

கண் விழித்தபோதிப்போ
கண்ணுக்குத் தெரியுது.
குருத்தோலை தோரணமும்
மரண அழுகையும்.

ஆனாலும்….. எப்போ….
விடியுமென்ற ஏக்கம்.
விடிந்துவிட்டால் அழும்பிள்ளை
புட்டிப்பாலுக்கென்ற தவிப்பு.

சோதனைமேல் வேதனை..
அழ வேரூன்றியிருக்கிறது.
அழுவதற்கா பிறந்தார்கள்
அனாதைகளா இவர்கள்…?

பூமிப் பந்திலும்
நடக்குது சதிராட்டம்
பொறுத்திருந்து பார்ப்போம்
புலம்புது இவ்வுள்ளங்கள்.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

துன்பத்திலும் இன்பம்…!

கருமுகில்கள் வானத்தை கௌவ்வி
களி நடனம் செய்யும்.
வான்மகளோ கண்டு அங்கு..
கண்ணீர் சிந்தி அழுவாள்…!

பொங்கி எழும் நெஞ்சு…
பொறுக்க முடியாமல் தவித்து…
சத்தமின்றி யுத்தம் செய்து…
பூமித்தாயும் மனம் நோகும்.

ஆனாலும் வேடிக்கை இது…
வான்மகளின் கண்ணீர் துளிகள்
மழை துளிகளாய் மாறி
பூமியை வந்து சேர…

நாவறண்டு போன நாணல்களோ…
திருப்திகண்டு ஆடி மகிழும்.
துன்பத்திலும் இன்பம் இங்கு
இயற்கைக்கும் இது பொருந்துதுபார்…!

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

நினைவில் தவம்…!

கவிதை ஒன்று நானெழுத
தலைப்பு ஒன்று அனுப்பிவைத்தாய்.
உனக்குள் வந்து போவதெல்லாம்
எனக்குள் வருமா கவிதைகளாய்…?

வாடாமல் மனது இருந்திருந்தால்
பூவாக மலர்ந்திருக்கும் புதுக்கவிதை..!
பார்த்து நீயும் ரசித்திருப்பாய்.
அசத்தலாயும் அது இருந்திருக்கும்.

தேய்ந்து மனம் தேய்பிறையாக
ஒடிந்து உள்ளம் இருக்கையிலே
ஒரு கவிதை எழுது என்று
சொல்லலாமோ சொல் கண்ணே.

சொன்னதனால் இதை கிறுக்குகிறேன்.
சுவை இருந்தால் பருகிக்கொள்.
இல்லை என்றால் தூக்கியெறி
அதுவும் சுகமாகும் எனக்குள்ளே

பட்டுடுத்த மேனி என்பேன்..
பால் நிலவு தோற்றமென்பேன்
பூக்கள்கூட உனை கண்டால்
பொறாமை கொள்ளும் என்றிடுவேன்.

மென்மைச் சிரிப்பழகும்..
மேன்மைப் பேச்சழகும்..
பெற்றதனால் நீ எனக்கு
அழகிய தமிழும் ஆனாய்.

உன் கன்னக் குழிகழுக்குள்
கவிதைகளாய் பூத்திருக்க
கவிதை ஒன்று வேண்டுமென்று
கட்டளை ஏன் பிறப்பித்தாய்…

காரணமோ தெரியவில்லை இதை
யாரிடமும் கேட்கவில்லை…..
நவரசமாய் எனக்குள் நீ
நர்த்தனங்கள் தினம் செய்வதனால்.

முகமறியா புது மலரே
முன்பு என்னை கண்டாயா…?
முழு நிலவாய் எனக்குள்ளே
முகம் புதைத்து சிணுங்குவதேன்…

நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக் கொஞ்சம் கதைப்பதற்கு
நீண்ட நாள் யோசித்தேன்.
நிலவே உன்னை பார்ப்பதற்கு.

அழகு தமிழ் வார்த்தைகளை
அடுக்கடுக்காய் நான் கோர்த்து
வாய் உதிரும் புன்னகையால்
வான் உயர பாராட்ட

வானுயர நீ பறந்து
விண்மீனை நீயும் தொட்டு
நிலாவுக்கும் சொந்தம் என்று
என் நெஞ்சமதை குழப்பிவிட்டாய்

போதும் இது போதும்
புன்னகையால் எனை வாட்டியது
காணும் இனி காணும்
கனவுகளில் காதல் கொண்டதுவும்..

கீழ் வானம் சிவந்திருக்க
மேல் வானில் வந்திருந்து
வானத்து கன்னி நீ
விடியலுக்காய் காத்திருந்து
விடை பெற்று சென்றாயோ..
வான்மதியே என் வணக்கத்திற்குரியவளே…!

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7521

பேச மறுத்த இதயம்.

கேட்காமல் தந்தாய்..
மறுக்காமல் ஏற்றேன்.

மறுபடியும் மௌனம்
மனதை குழப்புமா…?

காதல் என்பது
முன்றெழுத்து மந்திரமா…?

மூடி மறைத்து
இதயங்கள் தவிக்க…?

குழப்பமா உனக்குள்
கோபமா என்னோடு…?

வார்த்தைகளால் என்னை
வசமாக்கினாய் உனக்குள்.

நம்பினேன் நாளும்
தேங்கியது நினைவுகள்.

தேங்கிய நினைவுகளை
சேர்ந்தே சுவைத்தோம்.

அன்பை வளர்த்தோம்.
ஆனந்தம் அடைந்தோம்.

ஆசைகளை சேர்த்து
காதலுக்கு இறைத்தோம்.

என்ன சுகங்கள்
எத்தனை எதிர்பார்ப்பு.

இப்படியே இருக்க
எவ்வளவு போராட்டம்…!

இறைவனிடமும் கேட்டோம்
இணையவேண்டும் நாமென்று.

இத்தனையும் நொடிப்பொழுதில்
இடிந்துபோனது ஏன்…?

மௌனமாய் ஏனானாய்
மங்கையே சொல்லிவிடு..

பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை.

போவென்று சொன்னாலும்
பொய்யுரைக்க முடியவில்லை.

நல்ல மனங்களுக்கு
நாளும் தொல்லைதான்.

நீயன்று சொன்னது
பொருந்துதுபார் எனக்கு..

பொருந்தாத உள்ளங்கள்
புரியாது காதலை

இருந்தாலும் உன்னை
இன்றுவரை நேசிக்கிறேன்.

சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7529

வரதட்சணை.

கண்ணே  மணியே  என்று..
கனிமொழி  பேசி   காதலிப்பார்.
திருமணம் என்றால்   சீதனம்  கேட்கிறார்.
 

சீதனம்.


அன்றுதொடக்கம் இன்றுவரை எமது சமுதாயத்திலே ஆழமாக வேறூன்றி ஆலவருட்சமாய் வளர்ந்து நின்று பெண்களை அடிமைகளாக்கி ஆட்டிப்படைக்கும் அரக்கன்தான் வரதட்சணை.

இக்கொடுமையினால் பருவத்தின் படிகளைத்தாண்டியும் வரதட்சணை கொடுக்க முடியாமல் தவித்து தங்களுக்கும் ஒரு வாழ்வு கிடைக்குமா….? என ஏங்கி நிற்கும் யுவதிகளோ ஏராளம்.

அழகும் அறிவும் பண்பும் இருந்தும் பணம் இல்லை என்பதனால் வரதட்சணை கொடுத்து வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாமல் அவதிப்படும் மங்கையர் மனங்களை மாசு படுத்தும் ஓர் சமுதாயச் சீரழிவு அல்லவா இந்த வரதட்சணை.

இக்கொடுமையில் இருந்து மீழ்வோமா…? வாழ்வோமா…? என்று தினம் ஏங்கி விரக்தியின் விளிம்பில் நின்று வேதனைப்படும் சகோதரிகள் வடிக்கின்ற கண்ணீர்த்துளிகள் சொல்லுகின்ற கதைகள்தான் எத்தனை.

இருந்ததைக் கொடுத்துவிட்டு பிறகு மிகுதி தருவதாய்ச் சொல்லி வசந்த காலங்களை மனதுக்குள் நினைத்து மகிழ்ந்து வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் சொன்னபடி மிகுதி கொடுக்க முடியாமல் போனதனால் புகுந்தகத்திலிருந்து பிறந்தகம் வந்து வாழ்ந்தும் வாழாமல் இருப்பவர்களின் சோகக் கதைகளும் ஏராளம் ஏராளம்..

ஆனால் சீதனம் ஒரு சம்பிரதாயம் எனக் கருதும் பக்குவப்படாத மனித மனங்களை நினைக்கும் போதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இத்தகைய விந்தை மனிதர்களால் அன்று விதைக்கப்பட்ட சீதனம் என்ற விதைதான் விளைந்து இன்று படித்தவர் பாமரர் என்றும் பாராமல் பட்டி தொட்டி எங்கும் விழுதுகளூன்றி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இதில் ஆண்களை மட்டும் குறை கூறுவதும் தவறு. ஏனென்றால் சீதனம் கொடுத்துத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்போமென்று சொல்லுகின்ற பெற்றோர்களும் நிறைய உண்டு. இவர்கள் சீதனம் கொடுப்பதை தங்களுக்கு கௌரவமாக நினைக்கும்போது. சீதனம் வாங்கும் ஆடவரை இழிவு படுத்திப்பேசுவதும் அழகல்ல. என்பதும் என் கருத்து.

இருப்பதனால் கொடுக்கிறார்கள் அதனால்தான் வாங்குகுகிறோம் என்கிறார்கள் ஆண்கள். இவர்களது கருத்துக்களை ஏற்றுக்கொண்டால்.. சீதனம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் பெற்றோர்கள் என்ன செய்வது…? அவர்கள் தங்கள் பிள்ளைகளை வாழவைப்பது எப்படி…?
அதனால் அப்பெற்றோர்கள் அனுபவிக்கின்ற வேதனைகள்தான் எத்தனை…? வேதனையின் சுவடுகளை சுமந்து கொண்டு நிம்மதியிழந்து தினம் கண்ணீரும் கம்பலையுமாக வாழும்போது வாழ்க்கையே வெறுத்தல்லவா போகிறது…? இந்தநிலை மாறி இம் மனங்கள் சுகம்காண வேண்டாமா…?

அவர்கள் கொடுக்கிறார்கள் அதனால் நாம் வாங்குகிறோம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி.. சமுதாயத்தை சீரழிக்கின்ற கொடுமைகளை தகர்த்தெறிந்து வாழும்போது நேசக் கரம் நீட்டி சமுதாயம் எம்மையும் உள்ளன்போடு வரவேற்குமல்லவா…?

தீண்டத்தகாத பழையன நாம் மறந்தால்.. புதியன வந்து எமக்குள் புது மெருகு கொள்ளாதா…? எம்மால் முடியாதது ஒன்றுமல்ல. முடியுமென்று நினைத்துச் செயல்பட்டால் நிச்சயம் முடியும். சீதனம் எனும் கொடுமையினால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கும் மங்கையர்களின் வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் முலம் நல்லதொரு சமுதாயம் நாளை மலருமல்லவா…?

இளைஞர் சமுதாயம் சிந்தித்து செயல்ப்பட்டால் சீதன அரக்கனை ஏன் நாம் சிறைப்படுத்த முடியாது…? எம்மால் முடியும்… அப்போதுதான் இந்த சீதனம் என்ற சீரழிவிலிருந்து சின்னா பின்னமாகி சிதறுண்டு போயிருக்கும் எண்ணற்ற உள்ளங்கள் உவகை கொள்ளும்.

…சிவனேஸ்…

அழுவதால் ஆறாது…!


சோகம் தோய்ந்த முகவரியை
தேடிச் சென்று அலைகிறாய்
நாடி உன்னை வந்தாலும்..
ஒடிச்சென்று நீ ஒதுங்குகிறாய்.

மனமே உன்னை மாற்றிக்கொள்
மறுபடியும் ஏன் கலக்கம்…?
மௌனமாய் நீ அழுதால்
ஆறாது இந்த வடு…

ஆளும் தினம் உன்னை
அழுவாய் நாள் தோறும்
ஆறுதல் யாரும் இல்லை
அழுவதற்கா நீ பிறந்தாய்

கேட்ட வரம் கிடைக்கவில்லை
துரதிர்ஸ்டம் இது என்றால்
அழுது என்ன பயன்
ஆரறிவார் உன் நிலையை..

பார்ப்பவர் பலர் சிரிப்பார்.
பார்த்து மேலும் தேய்வாய்
சேர்த்த சுகம் போகும்
சேர்ந்து மனமும் தவிக்கும்.

எடுத்துச் சொன்ன சிலவார்த்தை
ஏற்படுத்தியதா உனக்குள் மாற்றம்…?
மாற்றம் இன்னும் இல்லையென்றால்
மாற்ற இனி முயற்சிசெய்..

…சிவனேஸ்…

மௌனம் ஏன்…?

மௌனமாய் அழும் மல்லிகையே
உன்மனதை பறித்தது யார்…?
வாசம் அறியாத வண்டு..
மனவானை சுற்றி பறந்ததனாலா…?

முகம் அறியாமல் உன்னோடு
பழகிய சில நாட்களில்..
புரிந்ததனால் உன் சோகம்
தவிக்கிறது மனமோ தினமும்.

கோடையில் மழை தூறுமென்கிறாய்
மாரியில் வெயிலென்று வேதனைப்படுகிறாய்.
வெளியில் சொல்ல வெட்கப்படுகிறாய்..
வேதனைகளை உனக்குள்ளே சுமக்கின்றாய்.

ஏக்கங்கள் தந்த தாக்கங்களினால்
சேர்ந்தது உனக்குள் சோகங்களா…?
சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்…?
வர்ணிக்க முடியாமல் வாடுவது ஏன்…?

வாய் விட்டு அழத்தோன்றியும்
உனக்குள்ளே சமாதானம் செய்து..
அமைதிப்படுத்தியும் முடியாமல் நீ..
முகவரியை தினம் தேடுகிறாய்.

முடிந்துபோன கதைகளை எண்ணி
மனம் நொந்து தேய்கிறாய்.
இன்று நீ தேய்பிறையானால்…
நாளை நீ வளர்பிறையல்லவா.

வாடாத மலர் நீ
வசந்தம் உன்னை தாலாட்டும்
மகிழ்ந்து மனம் மகிழும்
மலரே கலைத்துவிடு மௌனத்தை.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7202

« Older entries Newer entries »