தூங்காத விழிகளுக்குள்
சுகங்களங்கு போராட்டம்.
ஈரமான விழிகளுக்குள்
எண்ணங்களின் தேரோட்டம்
வற்றாத நினைவுகளோ
வந்து வந்து தாலாட்டும்.
பொற்காலம் வந்துவிடும்
போதுமென்று மனம் சொல்லும்.
வந்ததெல்லாம் பொய்யென்று
வாயடைக்கும் கண் சிவக்கும்.
காதோரம் நீர் வழிந்து
கன்னத்தை ஈரமாக்கும்
வற்றாத நதிக்குள்ளே
காட்டாறு பெருக்கெடுக்கும்
இயற்கைக்கும் உன்மீது
இரக்கமங்கு வந்துவிடும்
ஏற்காத உன் மனது
எட்டியதை உதைத்துவிடும்
உற்றாரை திட்டிடுவாய்
உறவினரை பகைத்திடுவாய்
உனக்குள்ளே வந்ததெல்லாம்
உண்மையென்று நினைத்திடுவாய்.
ஏற்க மறுத்துவிடும்
இளமையிது பொல்லாது.
சோகங்கள் தந்ததெல்லாம்
வேதனையின் சுவடுகளே…!
வெந்து நீ மடியாமல்
வேதனையை சுகமாக்கு.
விடியல் தேடி வரும்
வேதனைகள் ஓடிவிடும்.
…சிவனேஸ்…
பின்னூட்டமொன்றை இடுக