விடியும்வரை….!

சொந்தங்கள் ஏதுமின்றி
சுதந்திரமும் நாமிழந்து
தவிப்புகளை சுமந்துகொண்டு
அந்நிய தேசமொன்றில்
அகதியென்ற வாழ்வு…!

நினைக்கையிலே கனக்கிறது.
நெஞ்சமெனும் கூடு.
இழந்துவிட்ட சுதந்திரமும்..
ஏற்பட்ட வலியினையும்..
மறந்திடவும் முடியாமல்
மனமேங்கி அழுகிறது.

மாறுபட்ட எண்ணங்கள்
மனதுக்குள் நிழலாட ..அங்கு
மறுபடியும் வருமென்று
வசந்தத்தை எதிர்பார்க்கும்..
வாடி நிற்கும் மனங்களுக்கு
மகிழ்ச்சி தரும்
நாள் வருமா…?

அந்நிய மண்ணெமக்கு
ஆரோக்கியமாய் இருந்தாலும்..
சொந்த மண்ணின் சுகங்களும்
தொடர்கதையான உறவுகளும்
எங்கு சென்றாலும்
ஈடாகுமா….? எமக்கு.

குமுறிடும் நெஞ்சுக்குள்
கொழுந்து விட்டெரியும்..
நினைவுகள்..
அந்த விடியலுக்காய்
எத்தனை நாள் இன்னும்
தவித்திருந்து வாடுவது….?

காலமே கண்டுகொண்டு..
இக்கண்ணீர் கதைகளுக்கு
வைப்பாயா முற்றுப்புள்ளி….?
காத்திருந்து பெற்ற சுதந்திரம்..
கண்டு மனங்கள் களிப்படைய…?

…சிவனேஸ்…
www.thamilworld.com/forum/index.php?showtopic=6077

Follow

Get every new post delivered to your Inbox.