இன்பமும் துன்பமும்
இரண்டறக் கலந்தது.
இல்லறத்தில் மகிழ்ச்சி..
பொங்கிட வைப்பது.
பாசமும் பந்தமும்
பக்குவமாய் இருப்பது.
ஆணையும் பெண்ணையும்
ஒற்றுமைப் படுத்துவது.
வேற்றுமைகள் நிறைந்து
சங்கிலித் தொடரானது
விடியும் வரைக்கும்
பொறுமை காப்பது.
இழந்ததை எண்ணி
தவித்து ஏங்குவது.
ஏற்ற இறக்கங்கள்
நிரம்பி நிற்பது.
பொன்னும் பொருளும்
சேர்த்திட நினைப்பது.
சேர்த்ததை வைத்து
இறுமாப் படைவது.
சீதன அரக்கனை
வளர்க்க நினைப்பது.
சாதியம் பேசி
சாதிக்க நினைப்பது.
சுமைகள் நிறைந்து.
சோகம் கலந்தது.
ஜனனத்தில் மகிழ்ச்சி
மரணத்தில் துன்பம்.
மாய வலைக்குள்
மாட்டித் தவித்து.
துளிர்விடும் நினைவுகளால்
துன்பம் கலைப்பது.
வாழையடி வாழையாய்
மனித மனங்களுக்குள்..
வாழ்ந்து கொண்டிருப்பதும்
வாழ்க்கைதான்..
சிந்தனைப் பூக்களில்
சிறகடித்த வண்டுக்கு
பட்டதை சொல்லியிங்கு
பகிர்ந்து கொண்டது.
…சிவனேஸ்…