மறுபடியும் மடுவுக்கு வரவேண்டும்

அன்னையே நீயும்
அகதியா அங்கு..?
ஏற்கப் பொறுக்காமல்
மனமோ அழுகிறது.எங்கு நடக்கிறது
இந்த கொடுமை
உலக கண்களும்
புதினம் பார்க்குது…!

போகுமிடம் தெரியாமல்
ஒடிவந்த எம்மையெல்லாம்
நேசக்கரம் நீட்டி
செஞ்சோடு அணைத்தாயே
மடுத்தாயே அம்மா

அன்னையுன்னை நம்பித்தானே
மடுப்பதியில் குடியிருந்தோம்
இடம்பெயர்ந்து சென்றதனால்- தாயே
ஆரெமக்கு துணையம்மா…?

அகதியாய் நீயும்
அலைவது பொறுக்காமல்
அழுவதை தவிர
நாமென்ன செய்வோம்.

தெய்வங்களும் தினசரி
தெருத்தெருவாய் அலைவது
எம் நாட்டைத்தவிர
வேறெங்கும் நடப்பதுண்டோ…?

பத்திரிகை பார்த்து
பதைத்தே போனோம்
அன்னையே நீயும்
அகதியாய் போனது.

திரும்பும் திசைகளும்
சோகங்கள் சொல்லுது.
சொந்தங்களை இழந்து
மனங்களும் ஏங்குது.

வஞ்சக வலைக்குள்
வதைபட்டு துடிக்கிறோம்
வார்தைகள் வருமா
வாய்விட்டு சொல்வதற்கு

பேச்சு சுதந்திரமும்
காற்றோடு போச்சுது.
பிறர் சொன்னால்…
கேட்க ஆசையாயிருக்குது.

மனமுருகி அழுது
மன்றாடி கேட்கின்றோம்
மறுபடியும் தாயே..
மடுவுக்கு வரவேண்டும்.

 

………………….
…சிவனேஸ் …

http://www.lankasripoems.com/index.php?subaction=showfull&id=1207838964&archive=&start_from=&ucat=3&