நம்பிக்கை வேண்டும்.

எழுது எழுது என்று..
மனம் பலமுறை தூண்ட
எழுதுகோலை நான் எடுத்து
எழுத ஆரம்பித்து சிலகணங்கள்..

எழுத ஒன்றும் வரவில்லை
ஏனோ எனக்கும் தெரியவில்லை.
சிந்தனைக்குள் வந்து நின்று
மகிழ்விக்கும் சில காட்சிகளோ
ஒத்து வராமல் ஒதுங்கிநிற்க…!

மனம் சொல்ல மறுபடியும்
மனக்கணக்கு நீண்டு நகர்கிறது.
மாயக்கண்ணாடிக்குள் மனிதர்களின்
வாழ்க்கைப் பயணம் தொடர்வதுதான்.

உண்மையை ஒருகணம் எழுதினால்
சில மனங்கள் குழம்பிப்போகும்.
பொய்யை பலமுறை எழுதினால்
பலமனங்கள் மகிழ்ந்து சிரிக்கும்.

எனக்குள்ளே எழுகின்ற சிந்தனைகள்
எடுத்துச்சொல்ல முடியாமல் தவித்தாலும்
ஒருசில வரிகளை மட்டும்
கிறுக்கியது என் எழுதுகோல்.

விரிந்து கிடக்கிறது பாரபட்சம்
இனி விடியுமென்று நினைப்பதும்
அது முடியுமென்று கதைப்பதற்கும்..
உள்ளங்கள் ஊனமாகாமல் இருக்கவேண்டும்.

ஊனப்பட்ட உள்ளங்கள் எடுக்கின்ற…
உருப்படாத சில முடிவுகளால்தான்
உயர்வு தாழ்வுகள் தலைதூக்கும்
உறங்காமல் மனங்களும் மனம்சோரும்.

ஏன் இந்தக் கோலங்கள்
எதற்காக இவ் அவலங்கள்
ஒத்து வராத வேசங்களை
ஒதுக்கி வைத்தால் என்ன…?

சில நொடிப் பொழுதை
எமக்காக நாம் ஒதுக்கி
நம்மன அழுக்குகளை கழுவினால்
மாசற்றுத் திகளாதோ உள்ளம்.

சிந்தித்தால் முடிவு வரும்
நாளைய பொழுதும் நல்லதாய் …
மலர்ந்து மணம் வீசும்
என்ற நம்பிக்கையும் இருந்தால்

ஆழ் கடல் நடுவிலும் …
அலை அடித்துச் சென்றாலும்
திசைமாறாது அசைந்து செல்லும்
வாழ்க்கை எனும் பயணம்.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..