ஓ மனமே…!

ஓ மனமே….
நான் சீண்டிப்பார்பதாய் எண்ணி
நீயேன் சினங்கொண்டு அழுகிறாய்…?
சிரிப்பதைவிட நானென் செய்வேன்.

கடந்து வந்த பாதைகளில்
நடந்து பதிந்த சுவடுகளை
பல ஆண்டுகள் கழிந்தாலும்…
மறக்காமல் நீ திரும்பிப்பார்.

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
ஏற்படுத்திய தாக்கங்கள் அங்கு
ஆண்டுகள் பல உருண்டோடியும்
உருக்குலையாமல் உயிரோடுதானிருக்கிறது.

காலச்சக்கரத்துக்குள் நசிந்து…
அவை அழிந்து காணாமல்
காலாவதியாகிவிட்டதாய் எண்ணினால்
மனமே அதுவுன் தவறு.

நீ ஏறிவந்த படிகளிலே
ஏதேனும் உடைந்து விட்டால்
இறங்கிப்போக முடியாது…
அந்தரமாய் தொங்க வேண்டும்.
அதுதான் உண்மை.

அடுக்கி சிலவற்றை
அழகாக சொன்னாலும்
தவறு இருக்கென்று
குறை படுதல் இயல்புதான்.

சகதியாய் கிடக்கிறது.
சமுதாயத்திலே பல சிக்கல்கள்
உடைத்தெறிய நீ வேண்டும்
இல்லையேல் மடைதிறந்து அதுவோடும்.

கிறுக்கிய சில வரிகள்
மனமுன்னை தாக்கியிருந்தால்
மன்னித்துவிடு என்னை
மறுபடியும் ஏனிந்த வம்பு.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

Follow

Get every new post delivered to your Inbox.