கவிதையொன்று நானெழுத
கனநாளாய் ஆசைப்பட்டு
காகிதம் நானெடுத்து
சிந்தனையில் வந்தவற்றை
சிதைக்காமல் எழுதிப்பார்த்தேன்.
சினமாக இருந்தது
சில வரிகள்.
சமூகத்தை சித்தரிக்க
அழுக்கான மனங்கள்தான்
அழகாக தெரிந்தது.
சாதியும் மதங்களும்
சங்கடங்கள் செய்வதுவும்
வேடிக்கை பார்க்கின்ற
விந்தை மனிதர்களும்
மதிப்புயர்ந்த மனிதர்களாம்.
மனமோ படம்பிடித்து
நெஞ்சத்தில் திரையிட..
கொஞ்சம் பார்ப்பதற்கே
நெஞ்சம் மறுத்தது.
நினைக்கவும் முடியவில்லை.
புரைக்யோடி கிடக்கின்ற
சகிக்க முடியாத
சமுதாய பிரச்சினைகள்
சகதிகளாய் தினமும்
தெருவெங்கும் கிடக்கிறது.
சீதனத்தை சிலரோ
அருவருப்பதாய் பார்த்தாலும்
அவரும் கேட்கிறார்
சீதனத்தை அதிகம்
இதைவிட விந்தையேது.
அழுவதா சிரிப்பதா
அழுக்கான மனங்களைப்பார்த்து.
சொல்வதொன்று செய்வதொன்று.
தெரியாமல் தானோ
பூமியும் சுழல்கிறது.
காதலைப் பார்த்தால்
பாதிதான் வெற்றி.
சாதியால் பிரிந்தது
சமாதியில் சங்கமம்
மனமோ தவிக்குது.
ஊனப்பட்டது உள்ளம்தான்
உண்மையைச் சொன்னால்
சமுதாயம் சிரிக்கும்
பொய்யை சொன்னால்
பொறுமையாய் இருக்கும்.
உப்பில்லாத உணவும்
உண்மையில்லாத பேச்சும்
உருப்படி என்றால்
உருப்படுமா சமுதாயம்
உணர்வுகள் கேட்கிறது.
எரிச்சல் தருகிறது
இந்த வேதனைகள்
என்ன செய்வது..
எழுதி பார்க்கவே
ஏற்காத மனது.
புரியுதா உனக்கென்று
என்னையே கேட்க
எழுதி பார்த்ததை
கசக்கி எறிந்துவிட்டு
கண்களை கசக்கினேன்.
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..
..நட்புடன் சிவனேஸ்..