பிறந்த மண்ணில் அவலங்களா..?
பிறர் காணா துன்பங்களா..?
பெருமை சேர்த்த நாமெல்லாம்
பிறந்த நாட்டில் அகதிகளா..?
கொஞ்சி பழகி குதூகலமாய்
கூடி மகிழ்ந்த தெருக்களெல்லாம்
வெறிச்சோடிக் கிடக்குதங்கு…
நினைக்கையிலே கனக்கிறது நெஞ்சு.
ஓலை குடிசையிலும் நாம்
ஒற்றுமையாய் வாழ்ந்திருந்தோம்.
பாச வலை அறுத்து
பகைவன் எமை விரட்டியதேன்..?
ஆசையாய் கட்டிய கல்வீடுகளும்
அடுக்கடுக்காய் வளர்த்திட்ட ஆசைகளும்
கண்முன்னே இடிந்தங்கு
கண் நீராய் கரைகிறது.
ஈரமில்லா நெஞ்சத்தால் தினம்
இரக்கமின்றி வதை செய்தால்
போகுமிடம் நாம் எங்கு..?
பிறந்த மண்ணில் அகதிகளாய்…!
பிஞ்சுப்பருவத்திலும் பிடுங்கியெறிகின்றார்..
அரும்பி சிரிக்கும் மொட்டுக்களும்..
நடுங்கி நிலைகுலைந்து
அழுவதைப் பார் பீதியினால்…!
விதி வரைந்த கோலமென்று
வெதும்பி மனம் நோகிறது
விடியுமொரு பொன்னாள்
வேதனைகள் தீர்க்கும் அந்நாள்.
விடிந்திடவே துதிக்கின்றோம்
வேதனைகள் தீரும் என்று
அகதிகளும் நாங்களல்ல- மனம்
அறைகூவல் விடுக்கிறது.
சிவனேஸ்