விடியும் ஒரு பொழுது.


தாயே   தமிழ்   மொழியே
வணங்குகிறோம்    நாமுன்னை
பிறந்த   நாட்டில்    நெருக்கடிகள்
பிறந்து   விட்ட   காரணத்தால்

பிறந்த   மண்ணில்   அகதிகளாய்
போக   இடம்    தெரியாமல்
தனித்து   தவித்திருக்க..  தமிழன்னை
புகலிடத்தில்   நாம்  வாழ்ந்தாலும்..

கண்டதில்லை   ஒரு  போதும்
தமிழ்   மொழிக்கு    நிகராக
வேறு   மொழி    உண்டென்று…!
வாழ்த்துகிறோம்   தமிழ்  வாழ..

உன்  வயிற்றில்   கருக்கட்டி
இப்பிறவி    கிடைத்ததனால்
பாக்கியமே    நாம்  செய்தோம்
போற்றுகிறோம்   தாய்   உன்னை.

அடுத்து   வரும்    சந்ததிக்கும்
ஊட்டிடுவோம்     தமிழ்   பாலை
தரணியெங்கும்    தமிழ்   மொழியை
நடை    பயில    வைத்திடுவோம்..

தத்தித்தத்தி தளிர்  நடைபோடும்
பிஞ்சுகளும்   தமிழ்   பேச
பேருவகை   கொண்டிடுவோம்
தாய்   உன்னை    துதித்திடுவோம்.

விடியும்    ஒரு   பொழுது
வேட்டொலிகள்   தீரும்..
கந்தக   காற்றுமங்கு  கலைந்தே  போகும்
சுதந்திரக்   காற்றை   நாம்
சுவாசமாய்    கொள்வோம்.

ஏய்ப்பவர்    எரித்திட்ட   எம்மண்ணில்
இல்லாமை    நீங்கி   நாம்
எல்லோரும்     ஒற்றுமையாய்
இன்புற்று    வாழ்வோம்.

…சிவனேஸ்…