மறுபடியும் மடுவுக்கு வரவேண்டும்

அன்னையே நீயும்
அகதியா அங்கு..?
ஏற்கப் பொறுக்காமல்
மனமோ அழுகிறது.எங்கு நடக்கிறது
இந்த கொடுமை
உலக கண்களும்
புதினம் பார்க்குது…!

போகுமிடம் தெரியாமல்
ஒடிவந்த எம்மையெல்லாம்
நேசக்கரம் நீட்டி
செஞ்சோடு அணைத்தாயே
மடுத்தாயே அம்மா

அன்னையுன்னை நம்பித்தானே
மடுப்பதியில் குடியிருந்தோம்
இடம்பெயர்ந்து சென்றதனால்- தாயே
ஆரெமக்கு துணையம்மா…?

அகதியாய் நீயும்
அலைவது பொறுக்காமல்
அழுவதை தவிர
நாமென்ன செய்வோம்.

தெய்வங்களும் தினசரி
தெருத்தெருவாய் அலைவது
எம் நாட்டைத்தவிர
வேறெங்கும் நடப்பதுண்டோ…?

பத்திரிகை பார்த்து
பதைத்தே போனோம்
அன்னையே நீயும்
அகதியாய் போனது.

திரும்பும் திசைகளும்
சோகங்கள் சொல்லுது.
சொந்தங்களை இழந்து
மனங்களும் ஏங்குது.

வஞ்சக வலைக்குள்
வதைபட்டு துடிக்கிறோம்
வார்தைகள் வருமா
வாய்விட்டு சொல்வதற்கு

பேச்சு சுதந்திரமும்
காற்றோடு போச்சுது.
பிறர் சொன்னால்…
கேட்க ஆசையாயிருக்குது.

மனமுருகி அழுது
மன்றாடி கேட்கின்றோம்
மறுபடியும் தாயே..
மடுவுக்கு வரவேண்டும்.

 

………………….
…சிவனேஸ் …

http://www.lankasripoems.com/index.php?subaction=showfull&id=1207838964&archive=&start_from=&ucat=3&

நேசிப்பாயா….?

இளமைப்   பருவமதில்
இதயத்து   நெருடல்களால்..
எனக்குள்ளே   வந்து..
உறவொன்றை   வளர்த்தவளே…!

காலச்    சக்கரத்துக்குள்
நாம்   கவிதைகளானபோது
கற்பனை   வானிலும்
சிறகடித்து    பறந்தவளே…!

திரும்பும்   திசைகளெல்லாம்
உன்முகமே   தெரிய..
துள்ளிய  மனதை
தொட்டுரசிச்    சென்றவளே…!

காதல்    சிறைக்குள்ளே
கட்டிவைத்து   எனக்கு
காதலை   கற்பித்து
கல்கண்டாய்   இருந்தவளே…!

சொந்தங்கள்   கூடியெம்மை
சேர்த்து    வைக்குமென்றாயே
சுகமாக    இருந்தது
சொன்னவுன்   வார்த்தை.

விதிவரைந்த     கோலத்தில்
விடு    கதையாவோமென்று
எண்ணியதும்   இல்லை
ஏனெமக்கு     தொல்லை…?

சொன்னால்   தீர்ந்திடுமா…?
சுமைகள்தான்    இறங்கிடுமா…?
சாதியும்   மதமுமிங்கு
கங்கடங்கள்   செய்தது    ஏன்..?

சாதி  பார்த்தா    காதலித்தோம்
தடுத்தெம்மை   நிறுத்துதற்கு.
மதம்   பார்த்தா   முடிவெடுத்தோம்
மனமிரண்டும்   சேர்வதற்கு…?

மங்கை   உனக்குள்ளே
வந்துதித்த   காதலை
மனமுவந்து   ஏற்றதை
மறந்தேனோ  போனாய்…?

வாடாத    மலரே
கூடாத   கற்பனையை
தேனோடு   கலந்துனக்கு
தின்றுவிடச்   சொன்னது   யார்..?

காதலுக்கு    மொழியில்லை
மதமும்  இல்லை
சாதியும்   இல்லை
சாட்சிகள்   மட்டும்தான்

மனங்கள்   இரண்டும்
மனம்   வைத்தால்
திசைமாறாது   காதல்
தெம்புடனே   செல்லும்…!

உண்மைக்  காதலுக்கு
இதுவொன்று   போதும்
பொருந்துமா   இது
பொய்யான   காதலுக்கு.

நீ  செய்த   காதல்
நிலையற்று    போனாலும்
இன்னும்   நினைக்கிறேன்
காதலியாக   உன்னை…!

…சிவனேஸ்…

மௌனவிரதம்.

மனவானில் வந்திருந்து
மகிழ்ந்து சிரிப்பது ஏன்..?
மத்தாப்பாய் என் மனமும்
மகிழ்ச்சியால் தினம் துள்ளுவதேன்..?

சொல்ல தெரியாத சுகத்தை..
அள்ளித்தந்த உன் விழிகளை..
மறக்க முடியாமல் மனமோ..
புதுக்கவிதை சொல்கிறது.

புரியாமல் நானோ உன்னை
தெரியாமல் சந்தித்த நாளை
நினைத்து நீ வருவாயென்று
காத்திருக்கிறேன் எதிர்பார்த்து.

வதைக்காதே கண்மணியே
வாடிவிடும் என் மனது.
தேடிவந்து நீதானே காதலை
என் காதுகளில் சொன்னாய்.

சொன்ன விதம் கண்டு
சொக்கி நான் போகையிலே
நாணத்தால் முகம் சிவந்து
நம்காதல் வாழுமென்றாய்.

மறந்திருக்கமாட்டாய் நீயும்..
மனமொத்த காதல் இது.
பதியம் வைத்த மனம்
பக்குவமாய் தானிருக்கும்.

வெல்லும் இக்காதலென்று
விடியும் பொழுதுகளில் மனதுள்
சிறகடித்து பறக்கிறது
சின்ன சின்ன ஆசைகள்.

புரிந்திருக்கும் இது உனக்கு
தெரிந்திருந்தும் ஏன்..? எதற்கு..?
காதலுக்கு மௌனவிரதம்
கண்மணியே நீயே சொல்..?

சிவனேஸ்

http://www.lankasripoems.com/index.php?subaction=showfull&id=1206724789&archive=&start_from=&ucat=3&

அகதிகளா நாம்…?

பிறந்த மண்ணில் அவலங்களா..?
பிறர் காணா துன்பங்களா..?
பெருமை சேர்த்த நாமெல்லாம்
பிறந்த நாட்டில் அகதிகளா..?

கொஞ்சி பழகி குதூகலமாய்
கூடி மகிழ்ந்த தெருக்களெல்லாம்
வெறிச்சோடிக் கிடக்குதங்கு…
நினைக்கையிலே கனக்கிறது நெஞ்சு.

ஓலை குடிசையிலும் நாம்
ஒற்றுமையாய் வாழ்ந்திருந்தோம்.
பாச வலை அறுத்து
பகைவன் எமை விரட்டியதேன்..?

ஆசையாய் கட்டிய கல்வீடுகளும்
அடுக்கடுக்காய் வளர்த்திட்ட ஆசைகளும்
கண்முன்னே இடிந்தங்கு
கண் நீராய் கரைகிறது.

ஈரமில்லா நெஞ்சத்தால் தினம்
இரக்கமின்றி வதை செய்தால்
போகுமிடம் நாம் எங்கு..?
பிறந்த மண்ணில் அகதிகளாய்…!

பிஞ்சுப்பருவத்திலும் பிடுங்கியெறிகின்றார்..
அரும்பி சிரிக்கும் மொட்டுக்களும்..
நடுங்கி நிலைகுலைந்து
அழுவதைப் பார் பீதியினால்…!

விதி வரைந்த கோலமென்று
வெதும்பி மனம் நோகிறது
விடியுமொரு பொன்னாள்
வேதனைகள் தீர்க்கும் அந்நாள்.

விடிந்திடவே துதிக்கின்றோம்
வேதனைகள் தீரும் என்று
அகதிகளும் நாங்களல்ல- மனம்
அறைகூவல் விடுக்கிறது.

சிவனேஸ்