ஓ மனமே…!

ஓ மனமே….
நான் சீண்டிப்பார்பதாய் எண்ணி
நீயேன் சினங்கொண்டு அழுகிறாய்…?
சிரிப்பதைவிட நானென் செய்வேன்.

கடந்து வந்த பாதைகளில்
நடந்து பதிந்த சுவடுகளை
பல ஆண்டுகள் கழிந்தாலும்…
மறக்காமல் நீ திரும்பிப்பார்.

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
ஏற்படுத்திய தாக்கங்கள் அங்கு
ஆண்டுகள் பல உருண்டோடியும்
உருக்குலையாமல் உயிரோடுதானிருக்கிறது.

காலச்சக்கரத்துக்குள் நசிந்து…
அவை அழிந்து காணாமல்
காலாவதியாகிவிட்டதாய் எண்ணினால்
மனமே அதுவுன் தவறு.

நீ ஏறிவந்த படிகளிலே
ஏதேனும் உடைந்து விட்டால்
இறங்கிப்போக முடியாது…
அந்தரமாய் தொங்க வேண்டும்.
அதுதான் உண்மை.

அடுக்கி சிலவற்றை
அழகாக சொன்னாலும்
தவறு இருக்கென்று
குறை படுதல் இயல்புதான்.

சகதியாய் கிடக்கிறது.
சமுதாயத்திலே பல சிக்கல்கள்
உடைத்தெறிய நீ வேண்டும்
இல்லையேல் மடைதிறந்து அதுவோடும்.

கிறுக்கிய சில வரிகள்
மனமுன்னை தாக்கியிருந்தால்
மன்னித்துவிடு என்னை
மறுபடியும் ஏனிந்த வம்பு.

——————–

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

எரிச்சல் தரும் வேதனைகள்.

கவிதையொன்று நானெழுத
கனநாளாய் ஆசைப்பட்டு
காகிதம் நானெடுத்து
சிந்தனையில் வந்தவற்றை
சிதைக்காமல் எழுதிப்பார்த்தேன்.

சினமாக இருந்தது
சில வரிகள்.
சமூகத்தை சித்தரிக்க
அழுக்கான மனங்கள்தான்
அழகாக தெரிந்தது.

சாதியும் மதங்களும்
சங்கடங்கள் செய்வதுவும்
வேடிக்கை பார்க்கின்ற
விந்தை மனிதர்களும்
மதிப்புயர்ந்த மனிதர்களாம்.

மனமோ படம்பிடித்து
நெஞ்சத்தில் திரையிட..
கொஞ்சம் பார்ப்பதற்கே
நெஞ்சம் மறுத்தது.
நினைக்கவும் முடியவில்லை.

புரைக்யோடி கிடக்கின்ற
சகிக்க முடியாத
சமுதாய பிரச்சினைகள்
சகதிகளாய் தினமும்
தெருவெங்கும் கிடக்கிறது.

சீதனத்தை சிலரோ
அருவருப்பதாய் பார்த்தாலும்
அவரும் கேட்கிறார்
சீதனத்தை அதிகம்
இதைவிட விந்தையேது.

அழுவதா சிரிப்பதா
அழுக்கான மனங்களைப்பார்த்து.
சொல்வதொன்று செய்வதொன்று.
தெரியாமல் தானோ
பூமியும் சுழல்கிறது.

காதலைப் பார்த்தால்
பாதிதான் வெற்றி.
சாதியால் பிரிந்தது
சமாதியில் சங்கமம்
மனமோ தவிக்குது.

ஊனப்பட்டது உள்ளம்தான்
உண்மையைச் சொன்னால்
சமுதாயம் சிரிக்கும்
பொய்யை சொன்னால்
பொறுமையாய் இருக்கும்.

உப்பில்லாத உணவும்
உண்மையில்லாத பேச்சும்
உருப்படி என்றால்
உருப்படுமா சமுதாயம்
உணர்வுகள் கேட்கிறது.

எரிச்சல் தருகிறது
இந்த வேதனைகள்
என்ன செய்வது..
எழுதி பார்க்கவே
ஏற்காத மனது.

புரியுதா உனக்கென்று
என்னையே கேட்க
எழுதி பார்த்ததை
கசக்கி எறிந்துவிட்டு
கண்களை கசக்கினேன்.

வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் …..
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8283