மாலைப்பொழுதே…!

மனதை மயக்கிடும்
மாலைப் பொழுதே..
மவுசு கொஞ்சம்
அதிகம் உனக்கு.

மாலை என்றதும்
மனதை மயக்குகிறாய்.
மணிக் கணக்காய்
மனங்களை கவர்கிறாய்.

கற்பனைக் குதிரைக்கும்
கடிவாளம் இடுகிறாய்.
காத்து இருப்பதும்
தொடர்கதை என்கிறாய்.

காதலர் மனங்களை
களிப்புற வைக்கிறாய்.
கசக்காமல் இருந்திட
நாளையும் வருகிறாய்.

நம்பிக்கை உடன்தான்
நாடுது உன்னை.
நாயகி நீயென்று
நம்புது மனங்கள்.

காலைச் சூரியனும்
காதலிக்கிறான் உன்னை.
மாலை என்றதும்
அவன் முகமும்
வெட்கத்தால் சிவக்குது.

அந்தி நேரத்தில்
அந்தரங்கம் தொங்கிடும்.
வந்திறங்கி மனதுள்..
தொந்தரவும் செய்திடும்.

மனித அவலங்கள்
சங்கிலித் தொடர்தான்.
சங்கடங்கள் வருவதும்
போவதும் நிகழ்வுதான்.

மாய வலைக்குள்
மனிதர்கள் நடமாட்டம்
மனம்விட்டுச் சிரிப்பாய்
மாலையே நீயும்.

ஆனாலும் நீயோ..
வரவேண்டும் தினமும்
காத்திருக்கும் மனங்களை
களிப்புற வைப்பதற்கு.

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6968

புரியாத காதல்.

மனதைத் தளரவிட்டேன்.
மங்கை உன்னை
கண்ட பின்பு.

நினைவுகளை சோரவிட்டேன்.
நிலவே உன்னை
நேசித்த பின்பு.

கற்பனையை வளர்தெடுத்தேன்.
கன்னி உன்னை
கரம் பிடிப்பதற்கு.

உன்மனமும் மாறவில்லை.
ஏனென்றும் தெரியவில்லை.
எழுதிடவும் ஒன்றுமில்லை.

இதுதான் காதலென்றால்
உன்மனமும் கல்லா…?
எனக்கொன்றும் புரியவில்லை.

காதலைச் சொன்னதுவும்
நீதானே முதலில்
காயப்படுவது நானா…?

மாறுவாய் நீயென்று
மனமேனோ சொன்னதனால்
மாதங்கள் போயிற்று.

நாட்களும் தினமென்னை
நையாண்டி செய்கிறது.
காதல்வெறும் பொய்யென்று.

காதல் வடுக்களினால்
காயப்பட்ட மனம்
கண்ணீர் வடிக்கிறது.

காலம் பதில்சொல்லுமென்று
காத்திருந்து காத்திருந்து
இப்போ… ….

உறக்கத்தை தொலைத்துவிட்டேன்.
உன்னிடம் நான்
மோகம் கொண்டதனால்..

பசியையும் தொலைத்துவிட்டேன்.
பாவை உன்னை
மனம் தேடுவதால்.

பாவம் என்று
நீ நினைத்தால்
நம்காதல் வாழும்.

இனியவளே நீ சொல்லு
ஏனிந்த மௌனம்.
சம்மதம் ஆகுமா…?

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6971

காதல் வேசம்.

வந்து வந்து போகிறாய்
ஏனோ என் மனதை
இன்னும் புரியாமல் இருக்கிறாய்.

வேடிக்கைதான் இக் காதல்
வேண்டாம் இது போதும்
நீயும் என்னை நினைப்பதை.

மறந்துவிடு என்று சொல்ல
மனமோ எனக்கு இல்லை.
புரிந்திருக்கும் இது உனக்கு

போதும் இந்த வேசம்
புரியாமல் நான் தவித்தது.
தெரியாதா இது உனக்கும்.

காதலென்றால் இது அல்ல
கருத்தொருமித்து பழகுவது
அதுதான் காதல் இன்றும்

பொழுதை நீ கழிப்பதற்கு
போட்ட வேசம் இதுவென்று
புரிந்துகொண்டேன் அது போதும்.

நிறுத்திவிடு இனி வேண்டாம்
நிலையற்ற காதல் இது
கழி மண்ணாய் கரையட்டும்.

…சிவனேஸ்…

 http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6973