அகதிகள்.

பிறந்த மண்ணில் அவலங்கள்
அகதிகளாய் அவர்கள் அங்கு..
போகும் இடம் தெரியாமல்
புளுவாய் தினம் துடிக்கின்றார்..!

சொத்துக்கள் பல இழந்து
சுகங்களையும் இவை தொலைத்து
நிம்மதி இன்றி வாழ்வில்..
நிர்க்கதியாய் நிற்கின்றார் இன்று..!

பச்சைப் புல் வெளியும்
பனை வடலி தென்னையும்
பலன் தரும் மரங்களும்
பாழாய்ப் போய் கிடக்குதங்கே..

திருத்தலங்கள் பலவும் அங்கு
செயலிழந்து போய் கிடக்கு
திருத்த முடியாமல்… மீண்டும்
செல் வந்து தாக்குமென்று

சொந்த நாட்டில் ஒதுக்குப்புறம்..
பார்த்திவர்கள் போய் இருந்தாலும்
சொந்தமில்லை இது என்று..
அங்கு துரத்தி விரட்டுகின்றார்..!

போதும் இது போதும்
பொல்லாத காலம் இதுவென்று
புளுங்கி மனம் நொந்து
போய் இருந்து அழுகின்றார்.

அழும் குரல்கள் கேட்குமா…?
அரக்க மனம் படைத்தோர்க்கு
ஆண்டவனே பதில் சொல்லு…?
அகதிகளா இவர்கள் அங்கு…?

…சிவனேஸ்…

தேடுது உன்னை…!

இசையும் கதையுமாய்
எனக்குள் நுழைந்தாய்…!
ஏனென்று தெரியாமல்
எனக்குள் அவலம்…!

உதட்டின் அசைவுகளோ
உறவொன்று பிறப்பதை
உறுதி செய்யவே..

கண்களோ செய்யுது
எனக்குள் கலகம்
கண்மணி உனக்கு
என்மீது காதலா…?

காதலைச் சொல்லி..
காதலிக்க முன்பு
காத்திருந்து காதலிப்பதும்
காதலுக்கு சுகம்தான்.

கண்டிருந்தால் உனக்குள்
காதலின் சுகத்தை…
கச்சிதமாய் எழுதி
காகிதத்தில் அனுப்பு.

காத்து இருப்பதும்
காதலுக்கு வேதனைதான்.
காலம் போனால்
காதலும் வாடும்…!

பேதை உனக்கு
புரியாது இன்று
போதுமடி நீ..
செய்தது குறும்பு

மனமோ தினமும்
தேடுது உன்னை
மங்கையுன் மனதுள்
காந்தமா இருக்குது.

கவர்ந்து எடுத்து
காதலைச் சொல்ல
உள்ளமோ தினமும்
உன்னையே நாடுது.

…சிவனேஸ்…

மலரே…!

மலரே…!
காலையில்தானே நீ..
மலர்ந்து சிரித்தாய்
மாலையாகியதும் ஏன்
மௌனமாய் இருக்கிறாய்…?
வாடிவிடுவாய் என்பதற்காகவா…?

…சிவனேஸ்…

பட்டினிச் சாவு…!

நினைக்கையிலே   மனம்    கனக்கிறது.
நேற்றிருந்த     வாழ்வும்    அங்கு
இன்று     பட்டினிச்    சாவும்.

…சிவனேஸ்…

காதலின் ஆட்சி..!

சொர்க்கத்தில்    திருமணங்கள்
நிச்சயிக்கப்   பட்டாலும்
காதலின்     ஆட்சிதான்     அங்கும்.

…சிவனேஸ்…  

ஆசை…!

நினைவுக்குள்     வந்தாய்.
நிலவென்று    அழைத்தேன்.

கண்ணுக்குள்    வந்தாய்
காதலியென்று    அழைத்தேன்.

மனதுக்குள்      வந்துவிட்டாய்…!
எப்படி     நானழைக்க…?

ஆசைதான்    சொல்ல..
ஆனாலும்    தயக்கம்.

பூவுக்குத்      தெரியாதா…?
புதிர்போட்டுச்    சொல்லுவது..?

பூவும்   எனக்குத்தான்
புன்னகையும்    எனக்குத்தான்.

புரிந்திருக்கும்    உனக்கு 
அதுபோதும்    எனக்கு.

…சிவனேஸ்…

சாதியம்.

சாதியம்   பேசுகின்றாய்    நீ…
சாதிக்கப்   போவது   என்ன…?
சாதியம்   பேசியவர்கள்   சாதித்ததையும்..
நீ..    கண்டதுண்டா…?    கேட்டதுண்டா…?

…சிவனேஸ்…        

இணையத்தில்…

இணையத்தில்    காதலித்து 
இன்புற்று   மகிழ்ந்தாய்    அன்று
இணைப்பு  இல்லாததால்
தவிக்கிறாய்  இன்று.

…சிவனேஸ்…

அம்மா.

பாலுக்கு அழும் குழந்தை
பசி என்று சொல்வதில்லை.
தாய் உணர்ந்து கொள்கையிலே
பசி மறந்து மகிழ்கிறது.

தன் பசியும் கண்டிடாமல்..
காத்திரமாய் தான் இருந்து
கண் விழித்து பார்த்திடுவார்
பாலகனை வளர்ப்பதற்கு.

பிஞ்சு விரல் தொடுகையிலே
பேருவகை கொண்டிடுவார்.
அம்மா என்றழைக்க..
அகம் மகிழ்ந்து போய்விடுவார்.

பிள்ளைப் பருவமதில்..
பிறர் தூற்ற விடமாட்டார்.
பெருமை சேர்க்கும் பிள்ளையென
பெருமிதமும் கொண்டிடுவார்.

பள்ளிப் பருவத்தில்..
ஆசானாய் அவரிருந்து..
கல்விச் செல்வத்தை
கனிவோடு புகட்டிடுவார்.

வாலிபப் பருவமதில்
வரம்பு மீற விடமாட்டார்.
தண்டிக்க நினைத்தாலும்_ தந்தை
தடுத்திடவே நினைத்திடுவார்.

அன்புப் பால் ஊட்டி..
அணைத்து வளர்த்திடுவார்.
ஆளாக்கி வைப்பதற்கும்
அரும்பாடு பட்டிடுவார்.

தாய்க்குத் தலைமகனாய்
தான் பெற்ற பிள்ளையினை..
ஊர் போற்றும் உத்தமனாய்
உருவாக்கத் துடித்திடுவார்.

ஆழமான அன்பும்
அரவணைக்கும் குணமும்
ஆண்டவன் எமக்களித்த
அருங்கொடைதான் அம்மா.

…சிவனேஸ்…

http://www.thamilworld.com/forum/index.php?act=ST&f=3&t=6559