மார்கழி மாதத்து கடும் குளிரிலும் யாழினியின் மேனி வியர்த்துக் கொட்டியது. தன் தாயின் வாழ்வினில் ஏற்பட்ட கறைபடிந்த நினைவுகள் இன்னும் கலைந்து போகாமல் காத்து இருக்கையில்தனது மனமும் அத்தகைய அத்தியாயம் ஒன்றைப் புரட்டிப்பார்க்க ஆசைப்படுவதை நினைக்கும்போது அவளுக்கு பயமாக இருந்தது.
ஆனால்; தன்னையே நினைத்து வாழும் அரவிந்தை நினைக்கும்போது பாவமாகவும் இருந்தது.
தனக்கும் அரவிந்துக்கும் இடையிலே ஏற்பட்டுள்ள இந்த உறவு இருபது வருடங்களாகப் பிரிந்திருக்கும் தங்களது குடும்பங்களை ஒன்றுசேர்க்குமா……………..?
அல்லது உறங்கிப்போய்க்கிடக்கும் பகைமை உணர்வு மேலும் விரிசலடைந்து தங்கள் இருவரையும் வாழ்க்கையில் இணையவிடாது இரு துருவங்களாக்கி வடுமா…………………..?
இன்னும் ஏன் இந்தச் சமுதாயம் வர்க்க பேதங்களைச் சுமந்து நிற்கிறது…………? மனித மனங்களின்அகபலவீனங்கனினால் ஏற்படுகின்ற போலி மாற்றங்கள் நிசவாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற பின்னடைவுகளைக்கண்டு புளங்காகிதம் அடையவா………………..?
தன் தாயையும் இதனால்தானே இத்தனை வருடங்களாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.அவளை ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்த அவளது உறவுகள் இதுவரையில் சாதித்ததுதான் என்ன…………….? யாழினியின் சிந்தனைகள் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தன……
கொழும்பில் உள்ள அந்தக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர விஞ்ஞானப் பிரிவில்கல்வி பயின்று கொண்டிருந்த போதுதான் யாழினியின் பெற்றோர்களாகிய ஈழவேந்தனுக்கும் தமிழினிக்கும் இடையில் அறிமுகம் ஏற்பட்டது.
பழகுவதற்கு இனிய சுபாவமுள்ள ஈழவேந்தனுக்கு கல்வி மேல் இருந்த பற்றுதலும் கலை இலக்கியத்துறையில் அவனுக்கு இருந்த ஈ;டுபாடும் தமிழினியின் இதயத்தை ஈர்க்கத்தொடங்கியது.பள்ளிப் பருவத்தில் தோன்றுகின்ற பருவ நினைவுகளை அவனோடு பகிர்ந்துகொள்ளுவதற்கு ஆசைப்பட்டாள்.
ஆனால்; அவனோ இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் சாதுரியமாக விலகிச்சென்று விடுவது தமிழினியின் உள்ளத்திலும் சில உராய்வுகளை ஏற்படுத்தின.இருந்தாலும் அந்தக் கல்லூரியின் ஆண்டு விழாவின்போதுஅவளுக்குக்கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது உள்ளத்திலே அரும்பாகி இருக்கும் அந்தப் புனிதமான உறுவை தெரியப்படுத்தினாள்.
இதைக்கேட்டு சற்றுத் தடுமாறினாலும் தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு ஈழவேந்தன் சொன்னான்:
தான் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்ததாகவும் படிப்பின்மேல் தனக்கு உள்ள பற்றுதலால் தங்களது ஏழ்மையையும்பொருட்படுத்தாது தன்னை இங்கு அனுப்பி வைத்ததாகவும்…. எனது எதிர்காலம் நல்லதாய் அமைந்தால்தான் நெற்றி வியர்வை நிலத்திலே சிந்த வயல் வெளிகளில் அயராது உழைத்து அதனால்கிடைக்கும் சிறுவருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்நாட்களைக் கழித்துக்கொண்டு இருக்கும் எனது பெற்றோர் மனநிறைவு அடைவர்.
அதுமட்டுமல்ல வர்கத்திற்குள் வகைபிரித்து வேடிக்கைபார்க்கும் மனித மனங்களின் பலவீனங்களினால் பாதிக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எனக்கு ஊரறியாமல் உறவறியாமல் ஏற்படுகின்ற உறவுகள் நினைப்பதற்கு மட்டும்தான். இத்தகைய என்மீது நீ… வைத்திருக்கும் அன்பு உன் எதிர்காலத்தையே சீரழித்துவிடும் என்று கூறிமுடிக்க…….தமிழினியின் கண்கள் குளமாகிக்ரகொண்டிருந்தன…
அதைக் கண்ணுற்ற ஈழவேந்தனுக்கு அது அவள் தன்மீது கொண்டுள்ள காதலுக்கு அடையாளமா………..? அல்லது தனது நிலையைப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்ட பாசத்தின் பிரதிபலிப்பா………………..? என்று அவன் மனம் அங்கலாய்த்துக் கொண்டிருந்த வேளையில்………… ஐ லவ் யு வேந்தன் என்று கூறிகாதோரமாக வடிந்து கன்னத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளை தனது கைகளால் துடைத்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் தமிழினி.
மில்லலென அவளிடமிருந்து வந்த அந்த வார்த்தைகள் அவனது இதயத்தை முத்தம் இட்டுச் சென்றதனால் அன்புப் பிணைப்பு அவர்களது உறவுக்கு அத்திபாரமாய் அமைந்தது.
பின்பு மனதை மயக்கும் மாலைப் பொழுதுகளில் இயற்கை எழில் கொஞ்சும் அந்த காலிமுகத்திடலில் இவர்களது சந்திப்புகள் தொடர்ந்தன.. கருத்தொருமித்த இதயங்கள் தங்களுக்குள் வகுத்து வைத்து இருக்கும் இனிய நினைவுகளுடன் நாட்களை நகர்த்திக்கொந்டிருந்த வேளையில்.. ஈழவேந்தனும் எதிர்பார்த்திருந்த அந்த உயர்தரப்பரீட்சையில் கிடைத்த திறமைச் சித்திகளினால் உள்ளம் உவகை கொண்டு உயர் படிப்புக்காய் காத்திருக்க…. சிங்களம் தமிழைப்பார்த்துச் சிரித்தது. அதனால் கொழும்பு நகரத்தில் ஏற்பட பதற்ற நிலை இவர்களையும் தமதுசொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பியது.
அத்தேசத்தின் கோலத்தினால் தகைமை இருந்தும் கல்வியைத் தொடர முடியாத நிலை ஒருபக்கம் தன்னை நேசித்த தமிழினியின் பிரிவு தந்த தாக்கம் மறுபக்கமுமாய் வேதனையின் நெருடல்கள் அவனது நெஞ்சை அழுத்திக்கொண்டிருக்க..
கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் பரீட்சையில் கிடைத்த பாதகமான முடிவினாலும் தொலைந்துவிட்ட உறவைத்தேடி அலைந்து அலுத்துப்போய்விட்ட தமிழினியின் இதயம் அழுதுகொண்டிருந்தபோது…….
கைநிறையச் சீதனமும் கல்வீட்டோடு காணியும் கொடுத்து தமிழினியைத் திருமணம் செய்து கொடுப்பதற்காக அவளது பெற்றோர் தங்கள் தகுதிக்கு ஏற்ற வரனைத்தேடிக்கொண்டிருந்தனர்.
இந்த வேளையில்தான் விதி இவர்களை ஒன்று சேர்க்க ஆசைப்பட்டது.
சமுதாய சீர் திருத்தங்களுக்காய் தன்னையே அர்ப்பணித்து மனித மனங்களின் அகபலவீனங்களினால் வாழ்க்கையில் ஏற்படுகின்ற தீய விழைவுகளைப்பற்றி மேடை மேடையாக வாய்கிழியக் கத்திய தன் தந்தை தன்னையும் மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் ஈழவேந்தனது பெற்றோரின் சம்மதத்துடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டாள்.
ஆனால் விசயம் அறிந்ததும் தமிழினியின் பெற்றோர் நிலை தடுமாறி நின்றனர். தமது மகளின் மணக்கோலத்தைப் பார்ப்பதற்காக மனதினுள் அமைத்து வைத்திருந்த மணமேடை அவர்களது மனக் கண்களின் முன் இடிந்து பாழாகுவது கண்டு பதை பதைத்தனர்.
எப்படியாவது அந்த இரு உள்ளங்களையும் பிரித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டினர்.
இருந்தாலும் அவர்களது இந்த முயற்சிகளும் பயனளிக்காதுபோகவே…. ஊருக்கு உபதேசம் செய்த அவளது தந்தை பந்த பாசங்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்த தாய்…. தந்தை வழி சென்று தன்னையும் சீர்திருத்த வாதியாய் இனம் காட்டி நின்ற அவளது சகோதரன்…. தாய்க்கு அடுத்த படியாக நேசித்த தமிழினியின் அண்ணி… அத்தனைபேரும் அவளை ஒதுக்கிவைத்தனர்.
காதல் திருமணத்தை இவர்களது மனங்கள் எற்றுக்கொண்டாலும்… சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதி என்ற தாழ்வு மனப்பான்மை தடுத்து நிறுத்தியதால் தமிழினி இத்தனை வருடங்களாக தண்டிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறாள்.
ஆனாலும் பெற்றவர்களைப் பிரிந்து வாழும் வேதனையைத்தவிர அவள் சந்தோசமாகவே இருக்கிறாள்.
இன்று தன் கணவனின் வயதாகிய பெற்றோர்களுக்கு பணிவிடைகள் செய்வது ஆத்ம .திருப்தியை கொடுக்கிறது.
கணவனின் ஊதியத்தில் வாழ்க்கை என்ற ஓடமும் அமைதியாக நகர்ந்து கொண்டிருக்க மகள் யாழினியின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள்தான் தற்போது அவளிடத்தில் அதிகமாகக் காணப்பட்டது.
அப்போதுதான் அரவிந்திற்கும் யாழினிக்கும் அந்த உறவு ஆரும்பாகியது.
அது மொட்டாகி மலர்வதற்குள் கருகிவிட வேண்டும் என்பதுதான் யாழினியின் பிரார்த்தனையாக இருந்தது.
இருப்பினும் ….. தன் உயிர் உள்ளவரை உன்னோடுதான் என் வாழ்வு என்று உறுதியாகக் கூறிய அரவிந்தின் வார்த்தைகளையும் அவளால் உதாசீனம் செய்ய முடியவில்லை.
ஆனால். தன் தந்தைக்கு நேர்ந்த தலைகுனிவை தன் மகன் அரவிந்தன் திருமணத்திலாவது நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு திருமண ஏற்பாடுகளில் இறங்கியபோது அரவிந் சொன்னான்:
திருமணத் தரகருக்கு பணம் கொடுத்து சாதி … மதம் அந்தஸ்து பார்த்து.. மணப் பெண் தேடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு தமிழினி அத்தைக்கும் திருமணவயதில் பெண் இருப்பது தெரியாதா………………?
உங்களுக்குத் தெரியும்….. ஆனால் சாதி…….சாதி தடுத்து நிறுத்துகிறது. சாதி இன்னும் சாகாமல் இருப்பதனால்தான் வர்க்க பேதங்களை இன்னும் மனித மனங்கள் சுமந்துகொண்டிருக்கின்றன. இந்நிலை மாறி கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் என் அத்தையைப்போன்ற உள்ளங்கள் உவகை அடைய என் போன்ற இளம் சந்ததியினரால் நிச்சயம் முடியும் என்று நம்புகிறேன்.
எனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்னால் அது யாழினியுடன்தான் என்று கூறி முடிக்க அந்த வீடு அமைதியாகக் காணப்பட்டது. அது ஒரு நல்ல சகுனத்தின் அறிகுறியா………..?
…சிவனேஸ்…
(ஈழமுரசு வாரமலர் பாரிஸ்-12.08.1999)
suresh சொன்னது,
அக்டோபர் 12, 2007 இல் 12:52 பிற்பகல்
good